முதல் முறையாக தேர்தலில் வென்ற அன்புமணி.. உச்சி மோர்ந்த ராமதாஸ்...தைலாபுரத்தில் கறிச்சோறு!!
சென்னை: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ள பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வெற்றி, அவரது குடும்பத்தினரை உச்சி குளிர வைத்துள்ளது. குடும்பத்தோடு அன்புமணியின் வெற்றியைக் கொண்டாடியுள்ளது டாக்டர் குடும்பம்.
அன்புமணி வெற்றியைத் தொடர்ந்து கட்சியினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் கறிச்சோறு போட்டு விருந்தும் கொடுத்து மகிழ்வித்துள்ளனர்.
டாக்டர் அன்புமணி இதற்கு முன்பு ராஜ்யசபா தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் தர்மபுரியில் வென்று விட்டார்.
கடும் குழப்பங்களுக்கு மத்தியில்
அன்புமணி ராமதாஸின் வெற்றி கடும் குழப்பங்கள், போராட்டங்களுக்கு இடையே கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை.
கூட்டணியில் இழுபறி- தேமுதிகவுடன் மோதல்
ஆரம்பத்தில் கூட்டணி கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார். ஆனால் அன்புமணியின் விருப்பம் மற்றும் முயற்சி காரணமாக பாஜக கூட்டணியில் சேர சம்மதித்தார் ராமதாஸ். ஆனால் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் மோதல் ஏற்பட்டது
கடைசி வரை திக் திக்...
தொகுதிப் பங்கீட்டில் பாமகவும், தேமுதிகவும் விடாப்பிடியாக இருந்ததால் கடைசி வர டென்ஷன்தான்.. திக் திக்தான்...
தர்மபுரியில் மட்டும் பிரசாரம்
எல்லாம் சரியாகி தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில் பாமக வேட்பாளர்களுக்காக அதுவரை பிராசரம் செய்து வந்த டாக்டர் ராமதாஸ், கடைசியில் தனது மகன் போட்டியிட்ட தர்மபுரியில் மட்டுமே தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மற்ற தொகுதிகளுக்கு அவர் போகவில்லை.
முதல் வெற்றி
இத்தொகுதியில் மட்டுமே பாமக இந்தத் தேர்தலில் வென்றுள்ளது. மற்ற தொகுதிகளில் கோட்டை விட்டு விட்டது. பாமக தலைமையும் கூட மற்ற தொகுதிகளைப் பற்றிக் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.
உச்சிமோர்ந்த ராமதாஸ்
வெற்றிப் பெருமிதத்துடன் தனது தந்தையைச் சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வந்தபோது அவரது தந்தை ராமதாஸ் மகனை உச்சிமோர்ந்து உற்சாகத்துடன் வரவேற்றார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரும் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கறிச்சோறு போட்டு விருந்து
இதையடுத்து அன்புமணியின் வெற்றிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் தைலாபுரம் தோட்டத்திலேயே கறிச்சோறுடன் விருந்து படைக்கப்பட்டது. அனைவரும் சந்தோஷமாக விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.