தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 2 பொறுப்பு.. பின்னணி என்ன? அன்புமணி கேள்வி
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இரண்டு பொறுப்பு கொடுத்திருப்பதன் பின்னணி என்ன என்று அன்புமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்ற அனுமதித்து இருப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரசாத் சாகு, சென்னை குடிநீர் மேலாண்மை வாரியத்தின் இயக்குநராக பணியில் தொடர தமிழக ஆட்சியாளர்கள் விரும்புவது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பழுக்கற்ற புதிய அதிகாரியை தேர்தல் ஆணையம் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நம்பகத்தன்மை இல்லை
மேலும் அந்த அறிக்கையில், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாகு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நீடிக்கிறார். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்பது மட்டுமின்றி, தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியின் நம்பகத்தன்மையையும் சீர்குலைத்து விடும்.
இரண்டு பதவிகள் ஏன் ?
இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அமர்த்தப்பட்ட ஒருவரை, சென்னைக் குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பதவியையும் கூடுதலாக வழங்கி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
சத்ய பிரசாத் சாகு
சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு அவரது சேவை கண்டிப்பாகத் தேவைப்படுவதாகவும், இதற்காக அடுத்த 3 மாதங்களுக்கு அவரை மாநில அரசு பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும், அதை ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ மற்ற வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமகவின் நிலைப்பாடு
சத்யப்பிரதா சாகு இது வரை எந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர் என்பது உண்மைதான். ஆனால், அவரை இயக்குபவர்கள் நேர்மையற்றவர்கள் என்பதால், அவர்கள் விருப்பப்படி செயல்படுபவர்களையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பவர்கள் தமிழகத்தைச் சேராதவர்களாக மட்டுமின்றி, தமிழகத் தொகுப்பைச் சேராதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதியிடம் மனு அளிக்கபப்ட்டுள்ளது.
புதிய அதிகாரி நியமனம்
அதற்கு மாறாக, தலைமைத் தேர்தல் அதிகாரியையே ஓர் ஊழல் அமைச்சரின் கீழ் பணியாற்ற தேர்தல் ஆணையம் அனுமதித்தால், தலைமைத் தேர்தல் அதிகாரியின் செயல் பாடுகளில் அமைச்சரின் குறுக்கீடு இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது சத்யப்பிரதா சாகு தலைமையில் நடத்தப்படும் தேர்தல்கள் மீது ஐயத்தையே ஏற்படுத்தும். இதைத் தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. எனவே, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியிலிருந்து சத்யப்பிரதா சாகுவை உடனடியாக விடுவித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பணியை மட்டும் கவனிக்கும்படி ஆணையம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தலைமைத் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து சாகுவை விடுவித்து, அப்பணியில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட அதிகாரியை ஆணையம் அமர்த்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.