முழு மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்-அன்புமணி வேண்டுகோள்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று புதிதாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளையும் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மதுவுக்கு எதிராக பா.ம.க நடத்தி வரும் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில் இது இன்னொரு வெற்றியாகும். இத்தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உயர்நீதிமன்ற ஆணைக்குப் பிறகும் சொத்தைக் காரணங்களைக் கூறி மதுக்கடைகளை மூட அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 31.03.2017 அன்று மூடப்பட்டன. மக்கள் நல அரசாக இருந்திருந்தால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடை முறைப்படுத்தி இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசோ, நகர்ப்புறங்களில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 1,700 மதுக்கடைகளை சட்டவிரோதமாக திறக்கத்துடித்தது. அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தது. அதற்கு எதிராக பா.ம.க.வின் வழக்கில் தான் அரசுக்கு உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட ஆணையிட்ட உச்சநீதிமன்றம், அந்தத் தீர்ப்பிலிருந்து சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள நகர்ப்புற நெடுஞ்சாலைகளை மட்டும் உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இதைப்பயன்படுத்தி தமிழகத்திலுள்ள நகர்ப்புற நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக் கடைகளை திறக்க தமிழக ஆட்சியாளர்கள் முயன்றனர்.
இடைப்பட்ட காலத்தில் சண்டிகருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதைப்பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு துடித்தது. ஆனால், தமிழகத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் புதிய மதுக்கடைகளை திறக்க முடியாது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மறைத்து விட்டு, தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகளை திறப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த 01.09.2017 அன்று மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர் பிறப்பித்தார்.
அதைப் பயன்படுத்தி சுமார் 700 மதுக் கடைகள் திறக்கப்பட்டன. அவை அனைத்தும் சட்ட விரோதமாக திறக்கப்பட்டவை என்பதை பா.ம.க. ஆதாரங்களுடன் நிரூபித்ததைத் தொடர்ந்தே அந்தக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
மதுவை நம்பி ஆட்சி நடத்தும் நிலையை ஆட்சியாளர்கள் மாற்ற வேண்டும். நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடும்படியும், புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதித்து புதிதாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது. அத்துடன் மாதம் 500 கடைகள் வீதம் மூடி அக்டோபர் 2-ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.