குடிநீர் வாரியத்தில் முறைகேடு.. 100 ஏ.இ. பணிக்கு தலா ரூ.10 லட்சம் பேரம்: அன்புமணி பகீர் புகார்
தமிழக அரசின் குடிநீர் வாரியத்திற்கு தேர்வான உதவி பொறியாளர்கள் 100 பேரிடம் தலா ரூ.10 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடிநீர் வாரியத்துக்கு தேர்வான 100 உதவி பொறியாளர்களிடம் தலா ரூ.10 லட்சம் பேரம் பேசுகின்றனர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: " வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நல்லாட்சி வழங்க முடியாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு ஊழல் செய்வதில் மட்டும் புதுமைகளை படைத்து வருகிறது.
தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 100 உதவிப் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களுக்கு நியமன ஆணை வழங்க தலா ரூ.10 லட்சம் கையூட்டு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக இருந்த 100 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 16.10.2015 அன்று வெளியிடப்பட்டது.
தேர்வானவர்களுக்குப் பணிநியமனம் இல்லை
தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டு இன்றுடன் 60 நாட்கள் ஆகும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உதவிப் பொறியாளர்களுக்கு இன்று வரை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
மிரட்டும் ஏஜெண்டுகள்
உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பலரையும் தனித்தனியாக தொடர்பு கொள்ளும் மேலிடத் தரகர்கள் ஒவ்வொரு பணிக்கும் ரூ.10 லட்சம் வீதம் கையூட்டு வழங்க வேண்டும் என்றும், கையூட்டு வழங்காதவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காது என்றும் மிரட்டல் தொனியில் பேரம் பேசுகின்றனர்.
ஆர்டர் வழங்க லஞ்சம் - கொடுமை
வழக்கமாக பணியாளர்கள் நியமனம் நடைபெறும் போது பல்வேறு கட்டங்களில் ஊழல்கள் நடைபெறும். ஆனால், ஆள்தேர்வு நியாயமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பணி நியமன ஆணை வழங்க கையூட்டு கோருவது கொடுமையானது ஆகும். ஆள் தேர்வு முடிந்த பிறகும் மிரட்டி கையூட்டு வாங்குவது தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசின் புதுமை போலிருக்கிறது.
குடிநீர்த்தட்டுப்பாடு மக்கள் கொதிப்பு
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த விஷயத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான உதவிப் பொறியாளர்கள் இல்லாததால், பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவிப் பொறியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்தி குடிநீர் சிக்கலை சமாளிப்பது தான் அறிவார்ந்த செயலாக அமையும்.
உடனே பணி வழங்க வேண்டும்
எனவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 உதவிப் பொறியாளர்களுக்கும் நியமன ஆணைகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்."என்று கூறியுள்ளார்.