2026ல் பாமக தலைமையில் ஆட்சி! 2024 எம்பி தேர்தலில் வியூகம்! பொடி வைத்துப் பேசிய அன்புமணி ராமதாஸ்!
மயிலாடுதுறை : 2026ல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகம் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படும் எனவும், பிற கட்சி தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பச்சை துண்டு அணிந்து கடமைக்கு வந்து விவசாயிகளை பார்த்து செல்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இக்கன மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
'
மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட நிலங்கள் மழையில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? அன்புமணி பிளான் 'சீக்ரெட்’ - போட்டு உடைத்த டாப் நிர்வாகி!
அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சியால்புரம், குதிரைக்குத்தி, வேட்டங்குடி, நெய்தவாசல் பகுதிகளில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"சமீபத்தில் பெய்த கன மழையில் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நாசமடைந்துள்ளது. குறிப்பாக நாகை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் வட்டத்திலுள்ள பகுதிகளில் பயிர்கள் அதிகளவில் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு அரசு வழங்க வேண்டும். குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் என இரண்டு வட்டத்திற்கு மட்டுமே அறிவித்தார்கள்.
விவசாயிகள்
குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டம் நியாயமானது. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மழைக்காலங்களில் தூர்வாரப்படும் கால்வாய்களை அனைத்து காலத்திலும் தூர்வாரி வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் 7 முறை மேட்டூர் அணை நிரம்பி கொள்ளிடம் வழியே கடலை சென்றடைகிறது. குருவை முடிவில், சம்பா தொடக்கத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். எந்த நிபந்தனையும் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும்.
பேரிடம் மாவட்டம்
நாகை & மயிலாடுதுறை மாவட்டங்களை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் மழை பெய்தாலும் நாகை & மயிலை மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய வடிகால் இந்த மாவட்டங்கள் தான். எங்கு எப்போது மழை பெய்தாலும் இம்மாவட்டமே பாதிக்கப்படும். அரசு இம்மாவட்டத்திற்காக சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களை சேர்த்து 2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கணக்கின் கீழ் 88 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதில் சீர்காழி உட்பட 2 வட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் வெள்ளம்
ஆண்டுதோறும் வெள்ளம் வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு தீர்வு இல்லாமல் இல்லை. கோடைகாலத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும். கோடையில் தூர்வாரினால் அதில் உள்ள கணக்குகள் மக்களுக்கு தெரியவந்துவிடும். அதனாலேயே பருவமழைக்கு ஒருவாரம் முன் தூர்வாருகிறார்கள். தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் முதற்கட்ட களப்பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கிறார்கள். கோடையில் கடல் நீர் காவேரியில் 32 கி.மீ உள்ளே செல்கிறது. அதனை தடுக்க தடுப்பணை அவசியம். ரூ.575 கோடி செலவில் அளக்குடியில் தடுப்பணை அமையும் என எதிர்பார்க்கலாம்.
புகார்கள்
அரசு அதிகாரிகள் & காப்பீடு நிறுவனங்கள் மீது பல புகார்கள் வந்துள்ளன. அவர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு சாதகமாக கணக்கெடுத்து கணக்கு காண்பிக்கிறார்கள். விவசாயிகள் பாவப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் இலஞ்சம் கேட்காதீர்கள். நீங்கள் நன்றாக இருக்கமாடீர்கள். விவசாயி நெல் எடுத்து சென்றால் அங்கும் இலஞ்சம் வாங்குகிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் காப்பீடு விஷயங்களில் இணைந்தே செயல்படும். காப்பீடு எடுக்கும் அதிகாரிகள் உண்மையாக செயல்படுங்கள்.
தூர்வார வேண்டும்
பிரதம மந்திரி விவசாயிகள் திட்டத்தில் கடந்த ஆண்டு 3 தவணையாக ரூ.6 ஆயிரம் மொத்தமாக 11.80 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் அவை 3.70 கோடியாக சரிந்துள்ளது. 70% பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்படவில்லை. அதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அடுத்த 8 ஆண்டுகள் வரை மழை & வெள்ளம் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய வெள்ளம், வறட்சி ஏற்படவுள்ளன. அதில் இருந்து நம்மை பாதுகாக்க ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்.
பாமக ஆட்சி
2026ல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகம் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படும். பிற கட்சி தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பச்சை துண்டு அணிந்து கடமைக்கு வந்து விவசாயிகளை பார்த்து செல்கிறார்கள். நான் மாதமாதம் வருகிறேன். பெட்ரோ கெமிக்கல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல போராட்டம், வெள்ளம் & வறட்சி என எந்த சூழ்நிலையிலும் நான் விவசாய மக்களுடன் இருக்கிறேன். அவர்களை மாதாமாதம் வந்து பார்த்து கஷ்டங்களை கேட்டு அதனை தீர்க்க முயற்சிக்கிறேன். கட்டாயம் அவர்களின் துயர்களை தீர்ப்பேன்" என பேசினார்.