பாமக ஆட்சியில் சுமையில்லா கல்விமுறை.. செங்கோட்டையனுக்காக காத்திருந்தபோது அன்புமணி தடாலடி பேச்சு
பாமக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் சுமையில்லாத ஆரோக்கியமான கல்விமுறை அறிமுகம் செய்யப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை : அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி சுமையில்லாத கல்விமுறையை அறிமுகம் செய்வதே பாமகவின் நோக்கம் என்று அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சீரமைப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டதையடுத்து இன்று சென்னையில் விவாதத்திற்கு அன்புமணி அமைச்சர் செங்கோட்டையனை அழைத்திருந்தார். அமைச்சர் விவாதத்திற்கு வராத நிலையில் நாற்காலியில் அமைச்சரின் பெயர் ஒட்டப்பட்டு மேடையில் போடப்பட்டிருந்தது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் விவாத நிகழ்ச்சிக்காக காத்திருந்த அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசியதாவது :
கிராமப்புறங்களில் பெண் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை, இதற்கு ஒரே சாதாரண பிரச்னை கழிப்பறை வசதி இல்லாதது. சரியான அடிப்படை வசதிகள் அரசுப் பள்ளிகளில் இல்லாததால் மாணவிகள் படிப்பு தடை படுவதோடு 14 வயதிலேயே திருமணமும் செய்து வைத்துவிடுகின்றனர் பெற்றோர்.
போதுமான ஆசிரியர்கள் இல்லை
தமிழகத்தில் 34 ஆயிரத்து 500 பள்ளிகள் இருக்கிறது அவற்றில் கழிப்பறை, குடிநீர் வசதி இருக்கிறதா என்று அமைச்சர் என்றாவது ஆய்வு செய்திருக்கிறாரா. அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பு முழுவதிற்கும் 1 ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஆனால் சிபிஎஸ்இயில் ஒரு வகுப்புக்கு 3 ஆசிரியர்கள் உள்ளனர்.
புதிய அரசியல் காணலாம்
எனவே நமது கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆக்கப்பூர்வ சிந்தனைகள் குறித்து விவாதிக்க வாங்க இதை ட்ரெண்ட்டாக மாற்றுங்கள். கல்வி என்பது புத்தகத்தை சார்ந்தது மட்டுமல்ல, மாணவனுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டு முறையிலான கல்வி அவசியம்.
அரசுக்கு அக்கறையில்லை
கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியுள்ளனர், ஆனால் இந்த விபத்திற்கு காரணமான 15 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர், இதற்கு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு எதற்குத் தெரியுமா மேல்முறையீடு செய்கிறது டாஸ்மாக் கடையை மூடினால் அதனை திறக்க மேல்முறையீடு செய்கிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.
சுமையில்லா கல்வி முறை
கல்வி என்பது சுமையில்லாத கல்வியாக இருக்க வேண்டும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆர்வத்துடன் இருக்க வேண்டும், ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு போவதையே பாரமாக நினைக்கும் வகையில் தான் தற்போதைய கல்வி முறை உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆரோக்கியமான கல்வியை கொடுப்போம். கல்வியை வற்புறுத்தக் கூடாது, 10 கிலோ 12 கிலோ புத்தகங்களை தூக்கிக் கொண்டு செல்வது போல இருக்கக் கூடாது. ஈ பேக் சாப்ட்வேர் என்று ஒன்று உள்ளது அதில் புத்தகங்களை சுமக்க வேண்டாம் வீட்டுப்பாடத்தையும் அதிலேயே செய்து விடலாம்.
பாமக அளிக்கும்
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து தனியார் பள்ளிகள் எண்ணிக்கை வீழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். 5 அல்லது 6 ஆண்டில் தமிழ்நாட்டில் 100 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள் இலவச கல்வி பயில்கிறார்கள், சுமையில்லாத கல்வி என்ற நிலை வர வேண்டும். நிச்சயம் இதை எங்களால் செய்ய முடியும்.
கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு 26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், 40 ஆயிரம் கோடி பள்ளிகல்வித்துறைக்கு ஒதுக்கியிருப்போம். நானும் ஒரு துறையின் அமைச்சராக இருந்திருக்கிறேன், நிச்சயமாக அரசின் ஊழல்களை களைந்து இந்த நடவடிக்கைகளை எடுக்க எங்களால் முடியும்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கத் தயார்
எங்களைப் பற்றி குறை இருந்தால் எங்களை கூப்பிடுங்கள் நான் விவாதத்திற்கு வருகிறேன். என் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது ஆமாம் நான் ஏற்கிறேன். காங்கிரஸ் பொய் வழக்கு போட்டுள்ளது. 2008ல் 2 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் என்று 2012ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன பிறகு அந்த வழக்கை போட்டார்கள். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே கல்லூரிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆய்வு செய்தோம். ஆனால் கல்லூரி அனுமதிக்காக பணம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். என் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
|
வாங்க விவாதிக்கலாம்
எந்த விஷயமானாலும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தலித் பிரச்னைகளில் நாங்கள் எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள், அதற்கான தெளிவைத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம், என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.