தமிழகத்தில் 11 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் - மக்களை சந்திக்கும் அன்புமணி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மக்களிடம் கலந்துரையாட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்த அறிவிப்பில், "அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட மக்களுடன் கலந்துரையாட பா.ம.க முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முடிவு செய்திருக்கிறார். இதற்காக தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் ‘‘உங்கள் ஊர் உங்கள் அன்புமணி'' என்ற தலைப்பில் அவர் 11 நாட்களுக்கு மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார்.
இன்று காலை தூத்துக்குடியில் அந்த மாவட்ட பிரச்சினைகள் குறித்து அங்குள்ள பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாட உள்ளார். அன்று மாலை நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் விவாதிக்கிறார்.
மார்ச் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மதுரையில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட பிரச்சினைகள் குறித்தும், அன்று மாலை திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட பிரச்சினைகள் குறித்தும், 30 ஆம் தேதி புதன்கிழமை காலை திருச்சியில் திருச்சி, கரூர் மாவட்ட வளர்ச்சி குறித்தும், மாலை புதுக்கோட்டையில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட வளர்ச்சி பற்றியும் அந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடுகிறார்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து மார்ச் 31-ந்தேதி வியாழக்கிழமை காலை கும்பகோணத்திலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பிரச்சினைகள் குறித்து அன்று மாலை அரியலூரிலும் அவர் விவாதிக்க உள்ளார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கடலூரிலும், மாலை விழுப்புரத்திலும் அந்த மாவட்ட பிரச்சினைகள் குறித்தும், ஏப்ரல் 2-ந்தேதி சனிக்கிழமை காலை திருவண்ணாமலையிலும், மாலை காஞ்சிபுரத்திலும் அந்தந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட உள்ளார்.
தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி காலை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பிரச்சினைகள் குறித்தும், மாலையில் ஈரோட்டில் அம்மாவட்ட பிரச்சினை குறித்தும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசிக்கவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.