துணை வேந்தர்கள் நியமனம் நேர்மையாக இருக்க வேண்டும்: ஆளுநருக்கு அன்புமணி கடிதம்
துணை வேந்தர்கள் நியமனம் நேர்மையாக இருக்க வேண்டும் என தமிழக பொருப்பு ஆளுநருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: துணை வேந்தர்கள் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவுக்கு பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் கடந்த 18.04.2015 அன்று ஓய்வு பெற்றதால், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கடந்த 06.04.2015 அன்று அமைக்கப்பட்டது. தேர்வுக்குழுவின் அமைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகதாஸ் நியமிக்கப்பட்டார்.
அவர் சட்டவிரோதமாக பலரின் விண்ணப்பங்களை திணித்ததற்கு தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் தேர்வுகுழுவின் முறைகேடான செயல்பாடுகளை கண்டித்து தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ராமசாமி 11.02.2016 அன்று விலகினார். அதுமட்டுமின்றி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் துணைவேந்தர் தேர்வு நடைமுறையை புதிதாக தொடங்க ஆணையிட்டது.
அவரால் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் நிச்சயமாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பவராக இருக்கமாட்டார் என்ற ஐயம் நிலவுகிறது. அதேபோல், மற்றொரு பெருமை மிக்க நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பாஸ்கரன் மீதும் ஏராளமான முறைகேடு மற்றும் ஊழல் புகார்கள் உள்ளன.
எனவே பாஸ்கரன் தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்படும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும் தகுதியானவராக இருக்கமாட்டார். மாறாக சசிகலாவை அரசியலுக்கு அழைத்த தகுதி குறைவான செயலை செய்த துணைவேந்தர்களுக்கு இணையானவராகத்தான் இருப்பார்.
எனவே, காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் முருகதாசையும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் பாஸ்கரனையும் நீக்கி தமிழக ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும். அவர்களுக்கு பதிலாக அப்பழுக்கற்ற கடந்த காலத்தையும், வலிமையான கல்விப் பின்னணியையும் கொண்டவர்களை தேர்வுக் குழு அமைப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.