தொழில்முறை தன்னம்பிக்கை பயிற்சியாளரைப் போல் சமூக நீதி மாநாட்டில் பேசிய அன்புமணி
விழுப்புரம் சமூக நீதி மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், தொழில்முறை தன்னம்பிக்கை பயிற்சியாளர் 'கெட்அப்'பில் பேசினார்.
விழுப்புரம்: ஒரு தன்னம்பிக்கை பயிற்சியாளரைப் போல் பாமக நடத்தும் சமூக நீதி மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக நடத்தி வருகிறது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, காடு வெட்டி குரு மற்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ஆவணப்படம்
அதில் பேசிய அண்புமணி, நீட் பிரச்சனைக்கு எதிராகவும் நீட் ஏன் கூடாது எனவும் ஒரு நீண்ட உரையை ஆற்றினார். உரையின் இடையே நிறைய 'டேட்டா'க்களையும் கொடுத்தார். அன்புமணியின் உரைக்கு நடுவே, நீட் குறித்து ஆவணப் படத்தையும் காட்டினார்கள்.
சமூக நீதி, இடஒதுக்கீடு
அதுபோல சமூகநீதி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் சிறு சிறு படங்கள் காட்டினார்கள். மேலும், அன்புமணி ராமதாஸ் ஒரு ஐடி இளைஞரைப் போல பார்மல் பேண்ட் சர்ட் அணிந்து, 'லேப்பல் மைக்' எனப்படும் வயர்லெஸ் மைக்கை பொருத்தி உரையாற்றினார்.
'தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் போல
நீண்ட உரை, உரைக்கு நடுவே சிறு படம், பார்மல் பேண்ட் சர்ட், வயர்லஸ் மைக், ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் நடமாடிக்கொண்டே உரையாற்றுவது எல்லாம் 'பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட்', 'தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள்' நடத்தும் தொழில்முறை பயிற்சியாளர்கள் கடைபிடிக்கும் நடைமுறை.
அன்புமணி ஸ்டைல்
தொழில்முறை பெர்சனலிட்டி டெவலப்மெண்ட் பயிற்சியாளர்களைப் போல், அன்புமணி ராமதாஸும் சமூக நீதி மாநாட்டில் உரையாற்றினார். இது பார்ப்பதற்கு புதுமையாக இருந்தது எனவும் பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பயிற்சியாளர்களை நினைவூட்டுவது போல இருந்தது எனவும் சமூக வலைதளங்களில் கருத்து முன்வைக்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு ஆண்டுக்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்த அன்புமணி, இதுபோல பல புதுமைகளைச் செய்தார். மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற போஸ்டர் தமிழகத்தில் வித்தியாசமாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.