லெபனானில் சிக்கித் தவிக்கும் 9 தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை: அன்புமணி கோரிக்கை
சென்னை: லெபனான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 9 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவிடம் பாமக இளைஞரணி தலைவரும் தருமபுரி தொகுதி எம்பியுமான அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானில் சிக்கித் தவிக்கும் 9 தமிழர்களை மீட்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: லெபனான் நாட்டின் சோக் மோஸ்பே நகரில் உள்ள ஃபிலிடெக்ஸ் எனும் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தமிழகத் தொழிலாளர்கள் பலர் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் தங்களின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்த பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இவர்களில் 9 பேரின் கடவுச்சீட்டுகளை அந்த நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், அவர்கள் பெரும் துயரம் அனுபவித்து வருவதாகத் தெரிகிறது.
நிறுவனம் செய்த தவறுக்கு தமிழர்களைத் தண்டிப்பது முறையல்ல. இவர்களை வெளியுறவுத்துறை அலுவலகம் மூலமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.