அரவக்குறிச்சி பணம் பறிமுதல் விவகாரம்... அன்புநாதனின் முன்ஜாமீன் நிபந்தனைகள் நீக்கம்
மதுரை: அரவக்குறிச்சி பணம் பறிமுதல் விவகாரத்தில், அன்புநாதனின் முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன்(46). அதிமுக முக்கிய பிரமுகரான கருதப்படும் அன்புநாதனின் குடோன் மற்றும் வீட்டில் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.4,87,33,820 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
தேர்தல் சமயத்தில், இவர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் அன்புநாதன் மீது இரு வழக்குகள் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்குகளில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அன்புநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த வழக்குகளில் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் அன்புநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புநாதனுக்கு இரு வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்வு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அன்புநாதன் இனி காவல் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.