மதுரை கோயிலில் 120 வருட பழமையான நடராஜர்- சிவகாமியம்மன் ஐம்பொன் சிலைகள் திருட்டு
மதுரை: மதுரையில் தனியார் கோயிலில் இருந்த 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடராஜர்-சிவகாமியம்மன் ஐம்பொன் சிலைகளை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலை நடுத் தெருவில் நடராஜர்-சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. இதை எம். ராஜமாணிக்கம் என்பவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். கோயில் பின்பகுதியிலேயே அவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது கோயில் தரை தளத்தை உயர்த்துதல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ராஜமாணிக்கம் கோவிலுக்குச் சென்று பார்த்தபோது கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே கருவறையில் இருந்த நடராஜர், சிவகாமியம்மன் சிலைகள் திருடப்பட்டிருந்தன. கோயிலின் வெளிப்புற கதவிலிருந்த ஒரு பூட்டும், கருவறையின் வெளியே உள்ள இரும்புக் கேட்டின் 2 பூட்டுகளையும் மர்ம நபர்கள் சிறிய ரம்பத்தால் அறுத்தும், உடைத்தும் உள்ளே புகுந்து, சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
திருட்டுபோன நடராஜர் சிலை 2 அடி உயரமும், சுமார் 50 கிலோ எடையும் உடையது. சிவகாமியம்மன் சிலை ஒன்றே முக்கால் அடி உயரமும், 45 கிலோ எடையும் உடையது. இந்தச் சிலைகள் மிகவும் பழைமையானது என்பதால் அவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜமாணிக்கம், தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர்.