மிஸ் கூவாகம் 2014: விஜயவாடா சாதனா தேர்வு– ராதிகா சரத்குமார் கிரீடம் சூட்டினர்
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் விஜயவாடாவை சேர்ந்த சாதனா ''மிஸ் கூவாகம் 2014" பட்டத்தை வென்றார்.
விழாவில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கேற்று கூவாகம் அழகிக்கு கிரீடம் சூட்டி பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் வழிபடும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
சித்திரை திருவிழா
உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் கூடுவது வழக்கம்.
18 நாட்கள் திருவிழா
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இதில் நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக் கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி மாலை கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாக்கோலம் பூண்ட கூவாகம்
இந்த வருடமும் திருவிழாவை சிறப்பாக கொண்டாட திருநங்கைகள் விழுப்புரத்தில் கூட தொடங்கியுள்ளனர். விழுப்புரம் வீதிகள் எல்லாம் திருநங்கைகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மிஸ் கூவாகம் அழகி
இத்திருவிழாவின் ஒரு நிகழ்வான ''மிஸ் கூவாகம்" பேஷன் ஷோ போட்டி நேற்று நடைபெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த பேஷன் ஷோவில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
ஆடல் பாடல் அமர்களம்
விதவிதமான ஆடைகளில் வந்திருந்த திருநங்கைகளின் ஆடல் பாடலால் அழகிப்போட்டி தூள் பறந்தது. அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உடை, நடை, அறிவுத்திறன் என பலவற்றிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஆந்திரா திருநங்கை
இந்த மிஸ் கூவாகம் அழகி போட்டியில். தர்மபுரியை சேர்ந்த சாயா சிங்கிடம் இருந்து மிஸ் கூவாகம் பட்டத்தை விஜயவாடாவை சேர்ந்த சாதனா தட்டி சென்றார்.
ஐஸ்வர்யா, நமீதா
இரண்டாம் இடத்தை ஈரோட்டை சேர்ந்த ஐஸ்வர்யாவும், முன்றாம் இடத்தை சென்னையை சேர்ந்த நமிதாவும் பிடித்தனர்.
சரத்குமார், ராதிகா
மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமாரும் பட்டங்களை சூட்டி, பரிசுகளை வழங்கினார்கள். டிவி நடிகர் பிரிதிவிராஜ் கலந்து கொண்டு திருநங்கைகளை வாழ்த்தினார்.
அனைவரும் சமம்
பரிசளித்துவிட்டு திருநங்கைகள் மத்தியில் பேசிய சரத்குமார், ''2014 திருநங்கைகளுக்கு முக்கியமான வருடம். திருநங்கைகளை முன்றாம் பாலினமாக அங்கிகரித்து, திருநங்கைகளுக்கு உச்ச நீதிமனறம் மிகப்பெரிய அங்கிகாரத்தை அளித்துள்ளது. இன்று சமுதாயத்தில் நீங்களும், நாங்களும் சமமே என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்றார்.
தாலிகட்டுதல்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. புதன்கிழமையன்று தேரோட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து தங்கள் கழுத்தில் கட்டிய தாலியை அறுத்து விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
தர்மர் பட்டாபிஷேகம்
15-ந் தேதி விடையாத்தி உற்சவமும், 16-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறும். அத்துடன் திருவிழா நிறைவுபெறும். மகாபாரத காவியத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த திருவிழாவை கூவாகத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் 18 நாட்கள் கொண்டாடுகின்றனர் என்பது சிறப்பம்சமாகும்.