செம்மரக் கடத்தல் தொடர்பு: கரகாட்ட மோகனாம்பாளை கைது செய்தது ஆந்திர போலீஸ்
செம்மர கடத்தலில் தொடர்புள்ளதாக காட்பாடியை சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாளை நேற்று ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி கடந்த 7ஆம் தேதி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர். மரம் வெட்டும் கூலி தொழிலாளிகளாக காட்டுக்குள் சென்ற தமிழர்கள் 20 பேர் ஒரே நேரத்தில் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நடிகர், நடிகை கைது
இந்த நிலையில் செம்மரக் கடத்தல் கும்பலை பிடிக்க ஆந்திரா போலீசார் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட நடிகர் சரவணன் மற்றும் நடிகை நீத்து அகர்வால் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னணியில் யார்
இவர்கள் இருவரும் செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சரவணன், நீத்து அகர்வால் ஆகியோரின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்கவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் செம்மரக் கடத்தலில் கோடிகளை குவித்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், செம்மரக் கடத்தல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரகாட்ட மோகனாம்பாள்
வேலூர் அடுத்துள்ள காட்பாடியை சேர்ந்தவர் கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள். இவரது வீட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் ரூ. 6 கோடி, 700 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பணம் நகைக்கள் எப்படி
செம்மர கடத்தல் தொழிலில் தொடர்புடைய, மோகனாம்பாளின் அக்கா மகன் சரவணன் என்பவர் கடத்தல் தொழிலில் சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் மோகனாம்பாளிடம் கொடுத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மீண்டும் கைது
இந்த வழக்கில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சில நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியில் வந்தார். காட்பாடியில் உள்ள தனது வீட்டிலேயே வசித்து வந்த மோகனாம்பாளை, நேற்று ஆந்திரா மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸ் டி.எஸ்.பி. கிரிதர் தலைமையிலான போலீசார் திடீரென சென்று கைது செய்துள்ளனர்.
ஆந்திரா சிறையில் அடைப்பு
தற்போது செம்மரக் கடத்தல்காரர்களுக்கும், வியாபாரிகளுக்கும் மோகனாம்பாள் இடைத்தரகரகராக இருந்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. இன்று மாலையில் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவர் அம்மாநில சிறையில் அடைக்கப்படுகிறார். மோகனாம்பாளை விசாரணை செய்வதன் மூலம் செம்மர கடத்தல் கும்பல்கள் குறித்து தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.