சென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது... ஆந்திர அரசு கைவிரிப்பு
சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று ஆந்திர மாநில தெலுங்கு கங்கா திட்ட செயற் பொறியாளர் சுதாகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று ஆந்திர மாநில தெலுங்கு கங்கா திட்ட செயற் பொறியாளர் சுதாகர்பாபு தெரிவித்துள்ளார். இதனால் சென்னைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , 2 புள்ளி 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டார்.
இந்நிலையில் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பராமரிப்பு செலவுகளுக்கு ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய சுமார் 600 கோடி ரூபாயில், 575 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கண்டலேறு அணையின் மொத்த கொள் அளவான 8 டி.எம்.சி.யில் தற்போது, 4 புள்ளி ஆறு ஐந்து டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் தற்போதைக்கு சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என தெலுங்கு கங்கா திட்ட செயற் பொறியாளர் சுதாகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ள சூழலில் ஆந்திர கண்டலேறு நீரும் வருவதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.