கிருஷ்ணா நீரை நிறுத்திய ஆந்திரா- வறண்டது பூண்டி- ஆனாலும் 'யுகாதி' வாழ்த்து சொல்லும் தமிழகம்!!
சென்னை: தெலுங்கு மக்களின் புத்தாண்டாகிய 'யுகாதி'க்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தேவைக்கான கிருஷ்ணா நீரை சப்தமின்றி நிறுத்திவிட்டது ஆந்திரா. இதனால் சென்னையை அடுத்த பூண்டி ஏறியே வரலாறு காணாத வகையில் வறண்டு போய்விட்டது.
சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. வீராணம் ஏரியும் கை கொடுக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதே நாளில் பூண்டி ஏரியில் 232 மில்லியன் கனடி தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்றைய நிலவரப்படி 171 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் முறையாக வராததாலும் பூண்டி ஏரி வரலாறு காணாத அளவு வறண்டு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் புழல் ஏரியில் 2 ஆயிரத்து 272 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு ஆயிரத்து 682 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் கடந்த ஆண்டு 820 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இப்போது 879 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 72 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய நிலவரப்படி 47.23 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் சேர்ந்து இதே நாளில் மொத்தம் 3 ஆயிரத்து 396 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்று 2 ஆயிரத்து 802 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து 30 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 184 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலத்தில் இருந்து கோடை காலம் முழுவதும் 3 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும். வழக்கமாக அவர்கள் முழுமையாக தண்ணீர் தருவது இல்லை.
இதுவரை 1.3 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது. இன்னும் 1.7 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும் கடந்த மாதம் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் கிருஷ்ணா தண்ணீர் குறித்து ஆந்திராவில் பேச்சுவார்த்தை நடந்தது. என்றாலும் கிருஷணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் சென்னை குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் வகையில் கிருஷ்ணா நீரை நிறுத்திவிட்டது ஆந்திரா. ஆனாலும் அம்மாநில மக்கள் கொண்டாடும் புத்தாண்டான 'யுகாதி' திருநாளுக்கு தமிழக தலைவர்கள் வரிசையாக வாழ்த்து சொல்லுகின்றனர்!
என்னத்த சொல்றது?