அம்மா கேண்டீனில் புளியோதரை சாப்பிட்ட ஆந்திர அமைச்சர்: தரம், சுவை பிரமாதம் என பாராட்டு
சென்னை: சென்னை அம்மா உணவகத்தில், சாப்பிட்டு பார்த்த ஆந்திர பொது வினியோகத்துறை அமைச்சர் பரிட்லா சுனிதா, ஆந்திராவிலும் அதுபோன்ற உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் நகர பகுதிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை கேண்டீன்களை அரசு திறந்துள்ளது.
பொங்கல், புளியோதரை
இதில் பொங்கல், புளியோதரை, இட்லி, சப்பாத்தி, எலுமிச்சை சாதம், தயிர்சாதம் என பல வகை உணவு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பெங்களூரிலும் மலிவு விலை கேண்டீன்
அம்மா உணவகத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அதிகாரிகள் பலர் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். கர்நாடகாவிலும் இதுபோன்ற மலிவு விலை உணவகத்தை பெங்களூரில் திறக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
ஆந்திர அமைச்சர் ஆய்வு
இந்நிலையில், ஆந்திர உணவு வழங்கல் துறை அமைச்சர் பரிட்டாலா சுனிதா நேற்று, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகத்துக்கு வருகை தந்தார். அங்கு சுத்தம் பராமரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
புளியோதரை புசித்த அமைச்சர்
இதன்பிறகு புளியோதரை, பொங்கல் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்து ருசியையும் தெரிந்துகொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம், வாடிக்கையாளர்களின் வரவேற்பு குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த பொதுமக்களிடமும் தரம் மற்றும் சுவை குறித்து திருப்தியடைந்துள்ளீர்களா என்று கேட்டு அறிந்துகொண்டார்.
ஆந்திராவிலும் அம்மா ஸ்டைல் உணவகம்
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பரிட்டலா சுனிதா, அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "அம்மா' உணவகத்தில் அதிகளவில் கூட்டம் வருவதைப் பார்த்து வியப்படைவதாகவும், இது போன்ற மலிவு விலை உணவகங்களை ஆந்திரத்திலும் அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பரிந்துரைக்க போவதாகவும் தெரிவித்தார்.