தீவிரவமடையும் ஹூட் ஹூட் புயல்: தயார் நிலையில் ஆந்திரா, ஒடிஷா
சென்னை: ஹூட் ஹூட் புயல் தீவிரமடைந்துள்ளதால், அதன் தாக்கத்தை சமாளிக்க ஆந்திரா, ஒடிஷா மாநிலங்கள் தயார் நிலையில் உள்ளன.
வங்கக்கடலில் உருவான 'ஹூட் ஹூட்' புயல் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மிகத் தீவிரப்புயலாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 'ஹூட் ஹூட்' புயல் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு- தென் கிழக்கே 750 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்கு- வடமேற்காக புயல் நகர்ந்து வருவதாகவும், வரும் 12ஆம் தேதி நண்பகலில் ஆந்திராவின் விசாகப்பட்டிணம் அருகே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புயல் வலுவடைந்துள்ளதால் ஆந்திரா, ஒடிசா கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாவும், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது ஆந்திரா, ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
பைலின் புயல் போல
கடந்த ஆண்டு ஒடிசாவை தாக்கிய பைலின் புயல் போல் இந்த புயலும் சக்தி வாய்ந்தது. மணிக்கு 150 முதல் 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மின்கம்பங்கள் உயரமான மரங்கள், குடிசை வீடுகள் ஆகியவை சேதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலில் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் விசாகப்பட்டினம் வானிலை மையம் அறிவித்து உள்ளது.
ஆந்திரா - ஒடிஷாவில்
11-ந்தேதி முதலே இதன் தாக்கம் ஆந்திரா-ஒடிசாவில் தெரியவரும். கடலோர மாவட்டங்களில் அன்றைய தினமே பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தயார் நிலையில் மீட்புப்படை
புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் 4 கம்பெனி ராணுவ வீரர்கள் தற்போதே ஒடிசா, ஆந்திராவில் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணத்திலும் தயார்
அரக்கோணத்திலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயலின் தன்மையை வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
2ஆம் எண் புயல் எச்சரிக்கை
ஹூட் ஹூட் புயலால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனினும் கடலில் சீற்றம் உள்ளதால் நாகை, பாம்பன், கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என பாம்பன் துறைமுக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.