அங்கன்வாடி மையத்தை சுகாதார கேடான இடத்தில் திறப்பதா.. கலெக்டர் கார் மறிப்பு!
குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை சுகாதார குறைபாடு உள்ள இடத்தில் திறக்கக் கூடாது என்று எஸ்டிபிஐ கட்சியினர் நெல்லை ஆட்சியரை வழிமறித்தனர்.
நெல்லை: குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை சுகாதார குறைபாடு உள்ள இடத்தில் திறக்க கூடாது என்று கூறி எஸ்டிபிஐ கட்சியினர் அமைச்சர், கலெக்டர் காரை மறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கழுகுமலை சாலையில் அமைந்துள்ளது திருநீலகண்ட ஊரணி. நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் சுகாதார சீர்கேடாக ஊரணி மாறி விட்டது. இதை சீரமைக்க எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொது மக்கள் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இந்த ஊரணி அருகே காயிதே மில்லத் தெருவில் ரூ.7.50 மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கன்வாடி மைய திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் ராஜலெட்சுமி, கலெக்டர் சந்தீப் தந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது எஸ்டிபிஐ மற்றும் பொது மக்கள் ஆகியோர் கையில் கருப்பு கொடியுடன் திரண்டு அமைச்சர், கலெக்டரை முற்றுகையிட்டனர். அவர்களை அதிமுகவினர் தடுக்கவே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கு விட்டனர். பின்னர் எஸ்டிபிஐ கட்சியினர் கலெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுகாதார சீர்கேடாக இருக்கும் இடத்தில் அங்கன்வாடி மையம் திறப்பதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஊரணி சுற்று சுவரும் சிறியதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து வருகிற 10ம் தேதிக்குள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதை ஏற்ற கொண்ட எஸ்டிபிஐ கட்சியினர் மறியலை கைவிட்டனர்.