வறட்சி: தொடர்ந்து எரியும் காட்டுத் தீ- கிராமங்களுக்குள் ஊடுருவும் வனவிலங்குகள்- விவசாயிகள் அதிர்ச்சி
நெல்லை: வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி வனப்பகுதியில் தீ விபத்து அடிக்கடி நிகழ்கிறது. இதனால் மலைகளில் இருந்து ஊர்களுக்குள் வனவிலங்குகள் நுழைந்துவிடுவதால் நெல்லை மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக- கேரளா எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் புளியங்குடி, புளியரை, மேக்கரை, வடகரை, குண்டாறு, குற்றாலம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அரியவகை வன விலங்குகள், உயிரினங்கள், அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் ஏராளமாக உள்ளன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இத்தீவிபத்தால் வன விலங்குகள் காட்டு பகுதியில் இருந்து ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள புளியரை பகவதிபுரம், உக்கடம், வடகரை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை, மா, பலா, பாக்கு மரங்களை சேதபடுத்தி வருகின்றன.
இது குறித்து அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் செய்தும், தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வன விலங்குகளை விரட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை