அனிதாவை தொடர்ந்து பிரதீபா... உயிர் கொல்லியாக மருத்துவ நீட் தேர்வு
அனிதாவை தொடர்ந்து தற்போது பிரதீபா என்ற மாணவியின் உயிரையும் இந்த நீட் தேர்வு விழுங்கியுள்ளது.
Recommended Video
சென்னை: நீட் தேர்வால் கடந்த 2016-ஆம் ஆண்டு அனிதாவின் உயிர் காவு வாங்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு மாணவி பிரதீபாவின் உயிரும் பலியாகியுள்ளது.
மருத்துவ சேர்க்கை தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 2016-இல் கொண்டு வரப்பட்ட இந்த தேர்வு தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக அரசு மன்றாடியது. எனினும் மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் நீட் தேர்வை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த தேர்வு முழுக்க முழுக்க சிபிஎஸ்இ தரத்தில் நடத்தப்படுவதால் அதை மாநில பாடப்பிரிவு மாணவர்கள் எதிர்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
ஏழை மாணவி
அரியலூர் மாணவி அனிதா. மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள். பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்வில் அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார் ஏழை மாணவி.
தற்கொலை
இந்த நிலையில் தன் தாயை பறித்த உயிரை காக்கும் மருத்துவப் படிப்பை தான் எப்படியாயினும் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே தன் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டார். நீட் தேர்வால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. இதனால் மனமுடைந்த அனிதா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு அசரவில்லை
அனிதா தற்கொலைக்கு பிறகு, எத்தனையோ போராட்டங்களை தமிழக அரசியல் கட்சிகள் நடத்தின. எனினும் இவை எதுவுமே மத்திய அரசின் காதுகளுக்கு சென்றடையவில்லை. இதனால் நீட் தேர்வு தொடர்ந்தது.
மேலும் சிலர் பலி
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 5 ஆயிரம் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்காததால் அவர்களுக்கு சிக்கிம், ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று எழுத வேண்டிய சூழல் நிலவியது. இதில் கேரள மாநிலத்துக்கு மகனை தேர்வு எழுத அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதுபோல் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக மகள்கள் கூறியதை கேட்ட சிவகங்கை, புதுச்சேரியை சேர்ந்த இரு தந்தைகள் மாரடைப்பால் இறந்தனர்.
மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது போல் இன்னும் எத்தனை மாணவிகளின் உயிர்களை நீட் தேர்வு பலிவாங்க போகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.