'ரிட்டர்ன்' அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தது தி.மு.க.!
சென்னை: அ.தி.மு.க.வில் மீண்டும் சேரும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் கருணாநிதியை சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.
இதனால் தி.மு.க. தலைமை அனிதா ராதாகிருஷ்ணனை சஸ்பென்ட் செய்தது. இதன்பின்னர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணணயவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை. இதனால் வேறுவழியின்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்னர் அனிதா ராதாகிருஷ்ணன் ரகசியமாக சந்தித்து பேசியிருந்தார்.
இதன் பின்னர் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நேற்று நேரில் சந்தித்தார் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியுடம் உடனிருந்தார்.
இருவரையும் கருணாநிதியும் ஸ்டாலினும் சமாதானப்படுத்தி கை குலுக்க வைத்தனர். அனிதா ராதாகிருஷ்ணனும் தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்றுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழக பணியாற்ற அனுமதிக்குமாறு கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் தி.மு.க. உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.