மா.செ. பதவிக்குக் குறி வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்.. கிடைக்காவிட்டால் அதிமுக?
சென்னை: தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக நீண்ட காலமாக கோலோச்சி வரும் முரட்டு பக்தர் பெரியசாமியின் பதவிக்கு ஆபத்து என்கிறார்கள். அவரை நீக்கி விட்டு புதியவரை அந்த இடத்திற்குக் கொண்டு திமுகவில் தீவிர முயற்சிகள் நடந்து வருகிறதாம். அப்பதவியைப் பிடிக்க அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரமாக முயற்சிக்கிறாராம். ஒருவேளை பதவி கிடைக்காவிட்டால் அவர் திமுகவை விட்டு விலகி விடுவார் என்றும் பரபரப்பு கிளப்பப்பட்டு வருகிறது.
தோல்வியைச் சந்தித்த மாவட்டங்களில் களையெடுப்புப் பணிகளை திமுக தொடங்கியுள்ளது. கோவை, நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து தூத்துக்குடி பக்கம் தனது கவனத்தை திமுக மேலிடம் திருப்பியுள்ளதாம். தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நீண்ட காலமாக கோலோச்சி வரும் பெரியசாமியின் பயணம் முடியப் போவதாகவும் சொல்லப்புடகிறது.
அவர் மீது பலமான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த மாவட்டத்தில் திமுகவின் தோல்வி குறித்து பூச்சி முருகன், சூர்யா வெற்றிகொண்டான் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில் பலரும் சரமாரியாக பெரியசாமியைக் குற்றம் சாட்டியுள்ளனராம்.
கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சொற்ப வாக்குகளில் கட்சி தோல்வியுற்றதற்கு பெரியசாமியின் அலட்சியப் போக்கே காரணம் என்கிறார்கள். தூத்துக்குடியில் போட்டியிட்ட தனது மகள் கீதாஜீவன் வெற்றி மட்டுமே பெரியசாமிக்கு முக்கியமாக இருந்தது. மற்றவர்கள் குறித்து அவர் கவலைப்டவில்லை என்று பலரும் குமுறியுள்ளனராம்.
தூத்துக்குடியைத் தவிர வேறு எந்தத் தொகுதி்க்கும் அவர் கவனம் செலுத்தவில்லை, முக்கியத்துவம் தரவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை. இதனால்தான் கோவி்ல்பட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு தோல்வி கிடைக்க நேரிட்டதாக கட்சியினரே கூறியுள்ளனராம்.
இதன் காரணமாக தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் பெரியசாமியின் பதவி பறிபோவது நிச்சயம் என்கிறார்கள். கூடவே வடக்கு மாவட்ட மாவட்டச் செயலாளர் ராஜாராமும் தூக்கப்படுவது உறுதி என்கிறார்கள்.
இதையடுத்து மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த ஜோயல் மற்றும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பதவியைக் கைப்பற்ற களம் குதித்துள்ளனராம். ஆனால் ஜோயலுக்கு உள்ள ஆதரவு அனிதாவுக்கு இருப்பதாக தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் எப்படியும் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றி விடுவது என்பதில் தீவிரமாக உள்ளாராம் அனிதா.
ஒருவேளை மாவட்டச் செயலாளர் பதவி கி்டைக்காமல் போனால் கட்சியை விட்டு விலகி அதிமுகவில் சேரவும் அவர் தயாராக இருக்கிறாராம். அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.