திருச்செந்தூரில் ஜெ. போட்டியிடட்டும், நான் ராஜினாமா செய்யத் தயார்.. "அனிதா" அறிவிப்பு
தூத்துக்குடி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடட்டும். அவருக்காக நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்று தற்போது அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்தைச் சேர்ந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த 2001 ஆண்டு அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக ஆனார். தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2009 ல் கட்சித் தலைமையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அ.தி.மு.க வை விட்டு விலகி தி.மு.கவில் இணைந்தார். 2011-ல் நடந்த தேர்தலிலும் திருச்செந்துார் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுகவில் ராஜா போல இவர் இருந்தார். ஆனால் திமுகவில் இவருக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் பெரியசாமி வைத்ததுதான் சட்டம். அதைத் தாண்டி அரசியல் செய்ய முடியாமல் திணறினார் அனிதா.
திமுக தலைமையும் பெரியசாமிக்கே ஆதரவாக இருந்ததால் அப்செட்டான அனிதா அமைதியாக இருந்து வந்தார். இந் நிலையில் அவர் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புகிறார். இதற்காக கட்சித் தலைமையிடம் அவர் ஏற்கனவே பேசி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் தொகுதியை ஜெயலலிதாவுக்காக விட்டுக் கொடுக்கத் தயார் என்று அனிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை உருவாக்கிய கட்சியின் தலைவர் அம்மா. அவர் விடுதலையாகி வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
திருச்செந்தூரில் அம்மா நிற்பது குறித்து பேச்சு அடிபடுகிறது. அம்மா விரும்பினால் நான் உடனடியாக விலகி விடுவேன். அம்மா அங்கு நிற்கட்டும். நின்று பெரும் வெற்றி பெறட்டும்.
அதிமுகவில் இணைந்து கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். அல்லது அரசியலை விட்டு விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன். நான் இப்போதிலிருந்து திமுகவில் இல்லை. அந்த கட்சியின் தலைமை, பெரியசாமி என்ற ஒருவரை நம்பி, என்னைப்போன்று உழைத்தவர்களை இழந்திருக்கிறது அவ்வளவுதான் என்றார் அவர்.