அ.தி.மு.க.வில் சேரும் முயற்சி தோல்வி- தி.மு.க.வுக்கு 'ரிட்டர்ன்' ஆனார் அனிதா ராதாகிருஷ்ணன்!!
சென்னை: தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட திருச்சொந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வில் சேருவதற்கு கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் தி.மு.க.வுகே திரும்பியுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட அவர் தி.மு.க.வில் ஐக்கியமானார்.
2011 சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அனிதா ராதாகிருஷ்ணன். இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமியுடன் ஏற்பட்ட தொடர் மோதலால் கட்சியில் ஒதுங்கியிருந்தார்.
தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட்
மேலும் அனிதா ராதாகிருஷ்ணனை தி.மு.க.வுக்கு அழைத்து வந்ததே மு.க. அழகிரி என்பதாலும் கட்சி மேலிடத்தாலும் அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தார். தி.மு.க. நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
அ.தி.மு.க.வில் சேர முயற்சி
இதனைத் தொடர்ந்து தம்மை தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சி என்று அறிவித்தார் அனிதா. அத்துடன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை வெளிப்படையாக வரவேற்றார்.
முயற்சிகள் தோல்வி
மேலும் அ.தி.மு.க.வில் மீண்டும் தம்மை சேர்த்து கொள்ளுமாறு கடிதமும் அனுப்பியிருந்தார். இதன் பின்னர் பல முறை அ.தி.மு.க.வில் சேர அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு வந்துவிட்டது என செய்திகள் வந்தபோதும் எதுவும் நடக்கவில்லை.
தி.மு.க.வுக்கு ரிட்டர்ன்
இந்நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசிவந்தார் அனிதா ராதாகிருஷ்ணன். இதன் பின்னர் இன்று சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். தம்முடைய கட்சிவிரோத நடவடிக்கைகாக அனிதா ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணனின் பரம எதிரியான தூத்துக்குடி பெரியசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பெரியசாமி கை குலுக்கும் காட்சியுடன் கூடிய படத்தை ரிலீஸ் செய்துள்ளது திமுக தலைமை.
கருப்பசாமி பாண்டியன்..
அ.தி.மு.க.வில் சேர மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததாலே தி.மு.க.வுக்கு மீண்டும் ரிட்டர்ன் ஆகிவிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். இதேபோல் தி.மு.க.வில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட நெல்லை கருப்பசாமி பாண்டியனும் அ.தி,மு.க.வில் சேர முயற்சித்தார். அவருக்கும் அ.தி.மு.க. தலைமை சிக்னல் கொடுக்கவில்லை. இதனால் அனிதாவைத் தொடர்ந்து கருப்பசாமியும் அடுத்த சில நாட்களில் தி.மு.க.வுக்கு திரும்பிவிடுவார் என கூறப்படுகிறது.