திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது செல்லும்: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.மனோகரன் தோல்வி அடைந்தார். இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் பி.ஆர்.மனோகரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்துள்ளது. இந்த தபால் ஓட்டுகளை தேர்தல் அதிகாரிகள் முறையாக பாதுகாக்கவில்லை. பெரும்பாலான ஓட்டுகள் தி.மு.க.விற்கு விழுந்துள்ளது என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றிப் பெற்றது செல்லும் என்று கூறியுள்ளார்.