ஆதாரமே இல்லாமல் மனம் போன போக்கில் பேசுகிறார் கிருஷ்ணசாமி... அனிதாவின் சகோதரர் விளாசல்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதாரமே இல்லாமல் எனது தங்கை பணம் செலவு செய்து படித்தார் என்று மனம் போக்கில் பேசுகிறார் என்று அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பதிலடி கொடுத்துள்ளார்.
அரியலூர்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எங்கள் குடும்பத்தில் நடந்தவை குறித்து தெரியாமலேயே பேசி வருகிறார் என்று அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்தார்.
நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோனதால் விரக்தியடைந்த அரியலூர் அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது மரணத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வருத்தம் தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் வந்தனர்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், அனிதாவின் மரணத்துக்கு பரிதாபப்படலாம், ஆனால் அங்கீகரிக்க முடியாது. இந்த வருடம் இல்லாவிட்டால் அடுத்த வருடம் நீட் எழுதியிருக்கலாம்.
அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அனிதா தற்கொலை செய்து கொள்ள யாரோ தூண்டி விட்டுள்ளனர். அனிதா உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாட திமுகவினர் நிதியுதவி அளித்தனர் என்று தெரிவித்தார்.
மேலும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோருக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறுகையில் அனிதா ரூ. 1லட்சம் செலவு செய்து படித்ததாக ஆதாரமே இல்லாமல் தன்னிச்சையாக பேசுகிறார் கிருஷ்ணசாமி.
எங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பது கிருஷ்ணசாமிக்கு தெரியாது. எங்களுக்கு உதவியவர்கள் மீது அவதூறு பரப்புகிறார் என்றார் கிருஷ்ணசாமி.