கீர்த்தனாவும் என் தங்கைதானே... நெகிழ வைக்கும் அனிதாவின் அண்ணன்
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவும் என் தங்கைதான். அவரும் கஷ்டப்பட்டுதான் படித்திருப்பார். எனவே அவரை யாரும் வேதனைப்படுத்தும் வகையில் கருத்து சொல்லாதீர்கள் என்று நீட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் பலி கொண்ட முதல் உயிர் அனிதா. அவர் போன துயரத்தையே இன்னும் தமிழகம் மறக்கவில்லை. மறக்க முடியவில்லை. அதற்குள் இந்த ஆண்டு இரண்டு உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பாட முறையில் பயின்று நீட் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 12வது இடத்தைப் பிடித்த கீர்த்தனாவை பலர் விமர்சித்து கருத்துக்கள் கூறி வருகின்றனர். இதை அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தவறு என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள உருக்கமான முகநூல் பதிவு:
என் தங்கை கீர்த்தனா
கீர்த்தனா நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி(அவரும் என் தங்கை தான்) இரண்டு வருடங்கள் நீட் கோச்சிங் சென்று கஷ்டப்பட்டு தான் படித்து முதலிடம் பெற்றுள்ளார்.. அப்பா,அம்மா இருவரும் மருத்துவர் என்பதால் பணம் கட்ட கஷ்டமாக இருந்திருக்காது.
பாராட்ட வேண்டும்
அனிதாவிற்கும் கீர்த்தனாவிற்குமான சூழல் இடைவெளி மிகப்பெரியதுதான்,ஆனால் படித்து மதிப்பெண் பெற வேண்டும் என்ற தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார்,அதற்காக வாழ்த்தப்படவேண்டியவர்,பாராட்டப்பட வேண்டியவர்.. ஏதோ அவர்தான் அனிதாவையும், பிரதீபாவையும் கொலை செய்தார் என்பது போன்று இருவரையும் ஒப்பிட்டு புகைப்படத்துடன் பதிவுகள் வருவது வருத்தமளிக்கிறது..
இந்த அரசுதான் முதல் குற்றவாளி
பல்வேறு வகையான கல்விமுறைகளை ஏற்படுத்தி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் அரசுதான் குற்றவாளி... வசதி இருந்தால் நாமும் நம் குழந்தைகளுக்கு,எது தரமான கல்வி என்று நாம் நம்புகிறோமோ அங்குதான் சேர்ப்போம்...
சிபிஎஸ்இ மாணவர்களும் உடன்பிறப்புகள் தான்...
சிபிஎஸ்இ மாணவர்களும் நம் உடன்பிறப்புகள் தான்... எனினும், அரசுப்பள்ளி,சமூக,பொருளாதார, வாழ்விடம் ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்காக நீட்டை ஒழித்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்... என்று கூறியுள்ளார் மணிரத்தினம்.