ஜெ. இருந்திருந்தால் என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும்... அனிதாவின் தந்தை சண்முகம் ஆதங்கம்!
ஜெயலலிதா இருந்திருந்தால் என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும் என்று உயிரிழந்த அனிதாவின் தந்தை சண்முகம் தெரிவித்துள்ளார்.
அரியலூர் : ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும் என்றும், அரசியல் போட்டியால் நீட்டை அனுமதித்து என் மகளைக் கொன்றுவிட்டார்கள் என்றும் சண்முகம் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவ சீட் கிடைக்காது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் மாணவி அனிதா. அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனிதாவின் தந்தை சண்முகம் இது குறித்து அளித்துள்ள கண்ணீர் பேட்டியில் கூறியுள்ளதாவது : மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னுடைய மகள் அனிதாவிற்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும். அரசியல் போட்டி போட்டுக் கொண்டு நீட்டை அனுமதித்து என் மகளை கொன்றுவிட்டார்கள்.
நீட் பற்றி பேசினால் அதிமுககாரர்கள் வந்து எங்களின் வீட்டை அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டோம். சாப்பாடு கூட சாப்பிடாமல் மூட்டை தூக்கி கஷ்டப்பட்டுத் தான் படிக்க வைத்தேன். அவர் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தான் 3 வேளையும் டீ குடித்தே தான் அனிதாவை படிக்க வைத்தேன், ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது என்றார்.