விடைபெற்றாள் தமிழகத்தின் அன்பு மகள் அனிதா!
அரியலூர் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலம் குழுமூர் கிராமத்தில் தொடங்கியது.
அரியலூர் : நீட் தேர்வால் தகர்ந்து போன மருத்துவ கனவை ஏற்க மனம் மறுத்ததால் தன்னுடைய வாழ்வையே முடித்துக் கொண்ட அனிதாவின் உடல் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது.
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு என்று அரசின் பொதுத் தேர்வில் சிறப்பு வகுப்பு சென்று படிக்கும் மாணவர்களுக்கு இணையாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஏழ்மை நிலையிலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்து காண்பித்தார் அனிதா. ஆனால் திடீரென மருத்துவ படிப்புகளில் புகுத்தப்பட்ட நீட் தேர்வால் மருத்துவ கனவு கலைந்து விடுமோ என்று தினமும் அரசின் அறிவிப்பை எண்ணி காத்திருந்த அனிதா கடைசியில் உச்சநீதிமன்றப் படியேறினார்.
அங்கும் அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை, பாவம் அந்த குழந்தை மனம் அந்த வேதனையை ஏற்க முடியாமல் வெள்ளிக்கிழமை தனது வாழ்வை முடித்துக் கொண்டுள்ளது. நேற்று முதல் அவருடைய உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அனிதாவின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள திடலில் வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அனிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அனிதாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் உடல் தகனம் நடைபெற்றது.