அனிதா ... அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
அனிதாவில் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அரியலூர்: தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தார். 1200க்கு 1176 வாங்கி இருந்தார். மருத்துவம் படிக்க விருப்பம் கொண்டு இருந்தார். ஆனால் ஏழை குடும்பப் பிண்ணனியை கொண்ட அனிதாவால் நீட் தேர்வுக்கான பயிற்சியை பெற முடியவில்லை. ஆனால், மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் அவர் நீட் தேர்வு எழுத தள்ளப்பட்டார்.
அனிதாவினால் அதிக மதிப்பெண்கள் நீட் தேர்வில் எடுக்க முடியவில்லை. 700க்கு 86 மட்டுமே எடுக்க முடிந்தது. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவத்திற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இது இவருக்கு மனதளவில் பெரிய அளவில் ஏமாற்றத்தை மட்டுமின்றி, மன உளைச்சலை ஏற்படுத்தவே, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களும், உறவினர்களும் மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டியுள்ளனர். அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அனிதாவின் உடலை பார்த்து உறவினர்களும் பெற்றோர்களும் கதறி அழுதனர்.