பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்.. எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார் அனிதா?
Recommended Video
சென்னை: எத்தனை கனவுகளோடு இரவு பகல் பாராமல் படிப்பில் கவனம் செலுத்தி பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண்களை எடுத்திருப்பார் அனிதா என்பதே தமிழக மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் எரியும் கேள்வியாக உள்ளது.
ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த ஒருவர் அதுவும் பெண் குழந்தை, உயர் கல்வி படிப்பது என்பது நமது கல்வி கட்டமைப்பில் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டுவரும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் என்றால் அவர்கள் நிலைமையை சொல்லி தெரியவேண்டியதில்லை.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்து எழுந்து வந்தவர்தான் அனிதா.
எப்படிப்பட்ட இடர்பாடுகள்
பல கோச்சிங் கிளாஸ்கள் போக வசதியில்லாத ஒரு கிராம சூழல், இருந்தாலும் பணம் செலுத்தி படிக்க முடியாத வறுமை, குடும்ப சூழலில் கல்வியறிவு குறைவாக இருப்பதால் வழிகாட்டுதல்கள் கிடைக்காமை, போன்ற பல்வேறு இடர்பாடுகள் சூழ்ந்த சூழலில் இருந்து வந்தவர்தான் அனிதா.
அதிக மதிப்பெண்
இப்படிப்பட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவேயும், சமூக அழுத்தங்களுக்கு இடையேயும் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 2000க்கு 1176 மதிப்பெண்களை எடுத்தவர் அனிதா. அவரது சூழ்நிலை அடிப்படையில் பார்த்தால் இதுவே பெரும் சாதனை.
கனவுகள் விரட்ட வாழ்ந்தவர்
இதுமட்டுமல்லாமல், 196.5 கட்ஆப் மதிப்பெண்கள் எடுத்து அசத்தினார். இதனால் டாக்டர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் இருந்தார் அனிதா. சிறு வயது முதலே "நீ நல்லா படிக்கிற.. நீ கண்டிப்பா டாக்டராவ" என்றெல்லாம் உறவினர்களும், ஆசிரியர்களும் கூறிவந்த ஊக்க வார்த்தைகள் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. டாக்டர் கோட் போட்டபடி நடந்து வரும் காட்சி அவரது கனவுகளிலும் துரத்திக் கொண்டிருந்தது.
கடைசிவரை நம்ப வைத்தனர்
ஆனால்.. நீட் என்ற ஒரு நுழைவு தேர்வை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், கடைசிவரை நீட் தேர்வு இருக்காது என கூறி நம்ப வைத்துவிட்டு அறிமுகம் செய்ததன் விளைவு, அனிதாவின் அத்தனை கனவுகளும் கலைந்துபோயின. நீதிமன்றத்திலும், மத்திய அரசு நீட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது என கூறியதையடுத்து அனிதா மொத்தமாக உடைந்துபோனார். இத்தனை வருடமாக எந்த லட்சியத்திற்காக பாடுபட்டோமோ அது கடைசிவரை கைகூடாமல் போய்விட்டதே என்ற எண்ணம் அவரை உறக்கத்திலும் துரத்தியிருக்க வேண்டும். இந்த நிலையில்தான் இப்படி ஒரு சோகமான முடிவை எடுத்துள்ளார் அனிதா. இதுவே கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். அதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.