அழகிரி பேரணி!.. அமைதியில் அண்ணா அறிவாலயம்!!.. நடப்பது என்ன?
Recommended Video
சென்னை: சென்னையில் அழகிரியால் நடத்தப்பட்ட பேரணிக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால் அண்ணா அறிவாலயமே நிம்மதி பெருமூச்சில் அமைதி காத்துள்ளது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதியால் அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் அப்பாவுக்கு பிறகாவது கட்சியில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வந்தார்.
இந்நிலையில் கருணாநிதியின் சமாதியில் இருந்து தனது தர்மயுத்தத்தை தொடங்கினார் அழகிரி. அன்றைய தினம் கருணாநிதியின் உடன்பிறப்புகள் என் பின்னால் இருப்பதாக கொளுத்தி போட்டார். மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதி அமைதி பேரணியில் தன் பின்னால் லட்சம் பேர் திரளுவர் என்றும் சவால் விட்டிருந்தார்.
ஆலோசனை
இவற்றை கேட்டு அண்ணா அறிவாலய தலைமையோ திமுக நிர்வாகிகளோ எந்த வித கருத்துகளையும் தெரிவிக்காமல் அமைதி காத்தனர். இதனிடையே சவால் விட்ட நாளிலிருந்து அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பதில் இல்லை
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளுக்கு நாள் கூட்டம் குறைந்து கொண்டே இருந்ததை பார்த்த அழகிரிக்கு அவசரப்பட்டு வாய் விட்டுட்டோமோ என அவரது மைண்ட் வாய்ஸ் அவருக்கே கேட்டது. இதையடுத்து திமுகவில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்று மிரட்டியும் கெஞ்சியும் பார்த்தார். ஸ்டாலினிடம் இருந்து பச்சைக் கொடி பறக்கவில்லை. அழகிரியின் கருத்துக்கு பதிலும் அளிக்காமல் அமைதி காத்தார்.
பதற்றம்
இதையடுத்து ஒரு வழியாக நேற்று முன்தினம் பேரணிக்கு ஆட்கள் கூடினர் (அழைத்து வரப்பட்டனர்!). இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கேட்ட போது நோ கமென்ட்ஸ் என்று மட்டும் கூறினார். எனினும் கூட்டம் பேரணி நடைபெறும் இடத்துக்கு வர வர அண்ணா அறிவாலயத்தில் உள்ளவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
தகவல்கள்
மேலும் தனக்கு கூடிய ஒன்றரை லட்சம் பேரையும் திமுக நீக்குமா என அழகிரி காலரை தூக்கிக் கொள்ளாத குறையாக செய்தியாளர்களை கேட்டார். இதையடுத்து அழகிரி பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் கூடவில்லை என்றும் சொற்பமாக ஆயிரக்கணக்கிலேயே கூடப்பட்டது என்றும் தகவல்கள் வந்தன.
உத்தரவு
இதையறிந்த அறிவாலயம் நிம்மதி பெருமூச்சு விட்டது. இதையடுத்து அழகிரி பற்றி இனி யாரும் பேச வேண்டாம். யார் எத்தனை பேரணி நடத்தினால் நமக்கென? அவரவர் வேலையை அவரவர் பார்ப்போம் என தலைமை கழகத்திடம் இருந்து வாய்மொழியாக கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.