மழை வெள்ளத்தால் ஏப்ரல் தேர்வுகள் தள்ளிவைப்பு - அண்ணா பல்கலை அறிவிப்பு
சென்னை: சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மழையால் எஞ்சினியரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாத தேர்வு 10 நாட்கள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி அளித்துள்ளார்.
மழை, வெள்ளம் காரணமாக எஞ்சினியரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறக்கூடிய தேர்வுகள் 10 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து எஞ்சினியரிங் கல்லூரிகளிலும் 1, 3, 5, 7, 9, செமஸ்டர் தேர்வுகள் ஒருமாதம் தள்ளிவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் ஜனவரி மாத இறுதியில் தான் முடிவடையும்.
2, 4, 6, 8, 10 செமஸ்டர் வகுப்புகள் வழக்கமாக ஜனவரி மாதம் 18 ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த வருடம் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் வகுப்புகள் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தொடங்க இருக்கின்றன.
2, 4, 6, 8 மற்றும் 10வது பருவத்திற்கு உரிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வழக்கமாக தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் தேர்வுகள் 10 நாட்கள் வரை தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை தோறும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் தெரிவித்தனர்.