என்னாச்சு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு?.... ஒவ்வொரு பாடப் பிரிவாக மூடும் அவலம்
நெல்லை: அண்ணா பல்கலைகழகம் நெல்லை மண்டலத்தில் இளங்கலை பாடப்பிரிவை தொடர்ந்து சில முதுகலை பாட பிரிவையும் இழுத்து மூட முடிவு செய்திருப்பதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் இருப்பது போல் நெல்லையிலும் அண்ணா பல்கலை கழகம் தொடங்கப்பட்டது. பி.இ (ஜியோ, சிஎஸ், ஐடி) மற்றும் பகுதி நேர பாடப்பிரிவுகளாக பி.இ சிவில், மெக்கானிக்கல், டிரிபிள் இ ஆகிய பிரிவுகளும் தொடங்கப்பட்டன.
அடுத்த கல்வி ஆண்டிலேயே உயர் கல்விகளும் தொடங்கப்பட்டன. எம்.இ. முதுகலையில் 10 பிரிவுகளும், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுகலை பட்டபடிப்புகளும கற்று தரப்படுகின்றன. இங்கு கல்வி கட்டணம் குறைவு என்பதாலும், பகுதி நேரமாக படிக்க வசதி இருந்ததாலும் ஏராளமான தென் மாவட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் என்ற பெயர் மாற்றப்பட்டு அண்ணா பல்கலை கழக மண்டல அலுவலகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை வேந்தர், பதிவாளருக்கு பதில் டீன் பொறுப்பில் உள்ளார்.
அதே ஆண்டில் வேலைக்கு செல்வோருக்கு பயன் அளித்து வந்த பகுதி நேர படிப்புகள் இழுத்து மூடப்பட்டது. மேலும் எம்.இ. பிரிவில் இரண்டு பிரிவுகள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து அப்போதைய மேயர் தலையிட்டதால் நிறுத்தப்பட்ட எம்.இ. பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால் கடந்த ஆண்டு இளஙகலை பாடப்பிரிவுகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனை கடந்த வருடம் பெரிய அளவில் வெடித்தது.
இதனால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த கல்லூரியில் சேர்ந்து நேரடியாக குறைந்த செலவில் இளங்கலை பயிலும் வாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் முதுகலையிலும் கை வைக்க அண்ணா பல்கலை கழகம் முடிவு செய்திருபபதாக கூறப்படுகிறது. இதனால் இளங்கலையை தொடர்ந்து, முதுகலையிலும் வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று மாணவர்களும், பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.