விவசாயிகளை ஒருங்கிணைக்க தமிழகம் வருகிறார் அன்னா...!
கரூர்: தமிழக 'விவசாயிகளை ஒருங்கிணைக்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகம் வரவுள்ளதாக உழவர் உழைப்பாளர் சங்க தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் கூறியுள்ளார்.
உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் இன்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை அவரது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான்சித்தியில் கடந்த 18 ஆம் தேதி 20 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனது தலைமையில் சந்தித்துப் பேசினோம். தேசிய அளவில் ''கிஸான் சங்கத்தன்''என்ற பெயரில் அன்னா ஹசாரே தலைமையில் விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் உழவர் உழைப்பாளர் சங்கம் இணைந்து செயல்பட முடிவு செய்து அன்னா ஹசாரேவிடம் கடிதம் கொடுத்தோம்.
''கிஸான் சங்கத்தின்''தமிழக ஒருங்கிணைப்பாளராக இருந்து என்னைப் பணியாற்றக் கேட்டுக் கொண்டதோடு சாதி மதம் இனம் மொழி அரசியல் கடந்த சமூக அமைப்பாக ஒத்த கருத்துடைய அமைப்புகளையும் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் தனித்துச் செயல்பட்டு வரும் பல்வேறு விவசாய அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ரத்து செய்யவும், அழிந்து வரும் விவசாயத்தைப் பாதுகாக்கவும்,உணவுப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பது போன்ற விவசாயிகளின் நீண்ட நாளைய அனைத்துப் பொதுப் பிரச்சனைகள் குறித்து தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஜூன் மாதம் வர இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு மறைந்த 1984 க்குப் பிறகு தமிழ்நாட்டில் விவசாயிகளிடையே நாளுக்கு நாள் உருவாகி வரும் பிளவுகளும் பிரிவினைகளும் தடுக்கப்பட்டு அன்னா ஹசாரே வருகையின் மூலம் மீண்டும் புதிய எழுச்சி ஏற்படும் என்று நம்புகிறோம்.
விவசாய நிலம் வீட்டு மனைகளாவதை தடுக்கவும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முற்றிலும் ரத்து செய்யவும், இயற்கை விவசாயத்துக்கு அரசு முழுமையான திட்டங்களை வகுக்கவும், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கவும், விவசாயத்துக்கான தனி பட்ஜெட்டை தேசிய அளவில் தாக்கல் செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விவசாய விளைபொருட்களை சந்தைபடுத்தவும், மதிப்பீட்டுப் பொருளாக மாற்றி இலாபகரமாக விலை பெறவும் நேரடி ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவும் அன்னா ஹசாரே தமிழ்நாட்டில் விவசாயிகளிடையே ஒற்றுமையை உருவாக்கி ''நமக்கு நாமே''என்ற அடிப்படையில் செயல்பட தனது ''கிஸான் சங்கத்தன்''என்ற விவசாயிகள் அமைப்பின் நோக்கத்தை விளக்கிப் பேச உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தியா முழுவதும் விவசாயிகளை ஒன்றுபடுத்தி விவசாயிகளை காப்பாற்றக் கோரி சிறை நிரப்பும் போராட்டம், மறியல், தொடர் உண்ணாவிரதம் போன்ற அறவழி போராட்டங்களை நடத்த தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை பெற தமிழ்நாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்த இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி ஈரோட்டில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நிலம் கையப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.