எம்.ஜி.ஆர். வழியில்.. ஓ.பி.எஸ் + இ.பி.எஸ். அணிகள் போட்ட அதிரடி தீர்மானம்!
அண்ணாவுக்காக தலைவர் பதவியை உதறிய எம்ஜிஆர் போல ஜெயலலிதாவுக்கு பின்னர் பொது செயலாளர் பதவி இல்லை என்று அதிமுக பொதுக் குழு தீர்மானித்துள்ளது.
Recommended Video
சென்னை: அறிஞர் மட்டுமே என் தலைவர். அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது என்றார் எம்ஜிஆர். அதுபோல் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்று அதிமுகவின் இரு அணிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அண்ணாவின் திராவிட கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் எம்ஜிஆர். இதனால் திமுகவில் எம்ஜிஆர் இணைந்தார். இதனிடையே அண்ணா 1969-இல் மறைந்தார். அதன் பின்னர் கருணாநிதியின் கை திமுகவில் ஓங்கியது.
இந்த நேரத்தில் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. இதனால் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக என்ற கட்சியை 1972-இல் தொடங்கினார்.
தலைவர் பதவி
அப்போது தனக்கு தலைவர் என்றால் அது அண்ணாதான். அதிமுகவின் தலைவர் பதவியை தான் ஏற்க விரும்பவில்லை என்று கூறிய எம்ஜிஆர் கடைசி வரை அதிமுகவில் தலைவர் பதவியை உருவாக்கவில்லை. மாறாக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி அதில் அமர்ந்தார்.
எம்ஜிஆர் மறைந்த பிறகு...
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கடும் போராட்டத்துக்கு பின்னர் ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றினார். அதன்பின்னர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக வலம் வந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைந்தார்
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூடியது.
சசிகலாவின் நியமனம் ரத்து
இதில் பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. இதனால் இனி பொதுச் செயலாளர் பதவியே இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம்
அண்ணாவுக்காக தலைவர் பதவியே இல்லை என்று எம்ஜிஆர் கூறியது போல், ஜெயலலிதாவுக்காக பொதுச் செயலாளர் பதவியே இனி இல்லை என்று அதிமுகவினர் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.