அப்துல் கலாமிற்கு அஞ்சலி- கலந்தாய்வினை ரத்து செய்தது சிதம்பரம் அண்ணாமலை பல்கலை
சிதம்பரம்: முன்னாள் குடியரசுத் தலைவரும், நாட்டின் சிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாரடைப்பினால் காலமானார்.
இந்நிலையில் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த கலந்தாய்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் நிறுவனத்தில் உரையாடிக் கொண்டிருந்தபோதே மேடையில் மயங்கி சரிந்துவிட்டார் கலாம். உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள பெதானி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், மாரடைப்பால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கலாம்.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இன்று ஒருநாள் விடுமுறையை அறிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இன்று நடக்கவிருந்த டி.பார்ம் கலந்தாய்வினை ரத்து செய்து, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.