திருவண்ணாமலையில் நாளை மாலை மகா தீபம்.. பக்தர்கள் குவிகிறார்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனைக் காண அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திகழ்கிறது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் ஏற்றும் விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி 2668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அக்னி பிழ்ம்பாக காட்சியளித்த சிவபெருமான்
திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையே ஏற்பட்ட தான் என்ற அகந்தையை அழிக்கும் வகையில் சிவபெருமான் இங்கு அக்னி பிழம்பாக காட்சியளித்தாக கூறிப்படுகிறது. இதனால் அக்னி ஸ்தலம் என பெயர் பெற்ற இந்த கோவிலில் அதற்கு அடுத்த நாளே காத்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
பரணி தீபம்
கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி நாளை காலை நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கு அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. . இதைத்தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் , கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
நாளை மகா தீபம்
இதைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். கிரிவலப் பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்தர்கள் இதனை கண்டுகளிப்பார்கள்.
காண குவியும் பக்தர்கள்
ஆண்டுக்கு ஒருமுறை மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த மகா தீபத்தைக் காணவும் காலை முதலே கிரிவலம் செல்லவும் அங்கு ஏராளமான பக்தர்கள் இப்போதே குவிந்து வருகின்றனர்.
வாகனங்களுக்குத் தடை
இந்தக் கூட்டம் நாளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமைலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலீஸார் குவிப்பு
பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கு என்பதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதிலும் இருந்து 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
கோவில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆளிலில்லா குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிரம்பி வழியும் விடுதிகள்
நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படுவதை யொட்டி வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் விடுதிகளில் தங்கி வருவதால் பெரும்பாலான விடுதிகள் நிரம்பி வழிகின்றன.