போராட்டம் நடத்தப்படும் இடங்களை வெளியிட்டது போலீஸ்-மெரினாவுக்கு தடா
சென்னையில் போராட்டம் நடத்தும் இடங்களை காவல்துறை அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் எங்கெங்கு போராட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து சென்னை நகர காவல்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மக்கள் பாதுகாப்பு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தும் இடங்கள் பட்டியல் அறிவிப்பினை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் சென்னை மெரினா குறிப்பிடப்படவில்லை என்பதால், அய்யாக்கண்ணு மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு இல்லை என்பது தெரியவருகிறது. அதேபோல சென்னை பனகல் மாளிகை எதிரேவும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை பனகல் மாளிகை அருகே தலித் அமைப்புகள் கூட்டாக இணைந்து நேற்று முன் தினம் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பொதுவாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்கள் பனகல் மாளிகை அருகே இருந்து புறப்படும். இப்போது பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் வரும் 29-ந் தேதியன்று போராட்டம் நடத்துவோம் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகனும் அறிவித்திருக்கிறார். மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுத் தருவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்திருந்தார். ஆனாலும் போராட்ட இடங்கள் பட்டியலில் மெரினாவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.