'மாஜி’அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டினார்... மற்றொரு வேளாண் அதிகாரி ஞானதுரை புகார்
மதுரை: அதிக விலைக்கு தனியாரிடம் இருந்து உரம் வாங்கச் சொல்லி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டினார் என்று மற்றொரு வேளாண்மைத்துறை அதிகாரி புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு வேளாண் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட வேளாண்மைத்துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ஜெயசிங் ஞானதுரை (வயது58). இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதற்கான பிரிவுபசார விழா மதுரையில் நடைபெற்றது. அப்போது அங்கு விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், வேளாண்துறை அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய ஜெயசிங் ஞானதுரை, நான் நிறைந்த மனதோடு பணி ஓய்வு பெறுகிறேன். எனது பணி காலத்தில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் நுண்ணூட்ட சத்து நிறைந்த உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த உரங்கள் வாங்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜனவரி 26ஆம்தேதி போனில் என்னிடம் பேசினார். விவசாய நுண்ணூட்ட உரம் வாங்கும் டெண்டருக்கான கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு வற்புறுத்தினார்.
அதிக விலைக்கு உரம்
அந்த கோப்பை நான் ஆய்வு செய்தபோது அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு தனியாரிடம் இருந்து அந்த உரத்தை வாங்க அமைச்சர் நிர்பந்தம் செய்தது தெரிந்தது. ஏனென்றால் அரசு நிர்ணயித்த தொகை ஒரு கிலோவுக்கு 60 ரூபாய்தான். ஆனால் அமைச்சர் குறிப்பிட்ட தனியார் கம்பெனியில் இருந்து கிலோவுக்கு ரூ.120க்கு அந்த நுண்ணூட்ட உரத்தை வாங்குமாறு வற்புறுத்தினார். அதனை நான் ஏற்க மறுத்து விட்டேன்.
மிரட்டிய அமைச்சர்
இதனால் கோபம் அடைந்த அவர் என்னிடம், ‘‘மதுரையில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டினார். ஆனாலும் அது சம்பந்தப்பட்ட டெண்டரில் நான் கடைசி வரை கையெழுத்திடவில்லை.
அமைச்சரின் உதவியாளர்
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு அமைச்சரின் உதவியாளர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அமைச்சர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று கூறினார். ஆனால் நான் அந்த அமைச்சரிடம் பேச மறுத்ததுடன் எனது செல்போனையும் ‘ஆப்' செய்து விட்டேன்.
ஆட்சியர் உறுதுணை
ஆனால் இப்படிப்பட்ட நிர்பந்தங்களுக்கு இடையிலும் வேளாண் துறை செயலாளர் ராகேஷ் லக்கோனி, இயக்குநர் ராஜேந்திரன், மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் எனது நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
அதிகாரிகள் ஒத்துழைப்பு
ஆட்சியர் சுப்பிரமணியன் அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஒரு ரூபாய் அதிகமாக இருந்தாலும் அந்த உரத்தை வாங்க வேண்டாம் என்றும் எனக்கு அறிவுரை வழங்கினார். இப்படிப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பால் பணி நிறைவு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
பரபரப்பு குற்றச்சாட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது ஓய்வு பெற்ற நிலையில் மதுரை வேளாண் அதிகாரி புகார் தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.