கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு! கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம்!
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம்: கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த வாரம் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்வெளிகளில் பாய்ந்தது.
இதையடுத்து ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் வைக்கோல் போர் ஒன்றுக்கு தீ வைத்துவிட்டு அமைதியாக போராடிய மக்கள் மீது குண்டாந்தடிகளால் தாக்கினர்.
இதில் பலருக்கு மண்டை உடைந்தது. மேலும் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை ஜாமீனில் வரமுடியாத வழக்குகளின் கீழ் போலீஸ் கைது செய்தது. இவர்களை விடுதலை செய்யக் கோரி கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கதிராமங்கலம் பெரிய கடைத்தெருவில் மற்றொரு ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுகிறது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.