புழல் சிறையில் தொடரும் விபரீதம்… குண்டூசியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி!
சென்னை புழல் சிறையில் கைதி ஒருவர் குண்டூசியை விழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலையைத் தொடர்ந்து மற்றொரு கைதி குண்டூசியை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறை அதிக பாதுகாப்பு உள்ள கண்காணிப்புகள் மிகுந்த சிறை என்று பெயர் பெற்றது. ஆனால் அந்த சிறையில் தற்போது, அடுத்தடுத்து தற்கொலை முயற்சிகள் நடப்பது சிறை கண்காணிப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மிகுந்த கட்டுபாடுகளும், கண்காணிப்பும் உள்ள சிறைச் சாலையில், மின்கம்பியை பல்லால் கடித்து தற்கொலை முயற்சியில் ராம்குமார் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது.
இதனால், தமிழகத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற ஐ.டி. துறையைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி கொலையில் எந்தவித தடயமும் இல்லாமல் போனது. ராம்குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற உண்மைகளும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் குண்டூசியை விழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்புராஜ் என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திடீரென குண்டூசியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
இந்தத் தகவலை அறிந்த சிறை காவலர்கள், கைதி அப்புராஜை மீட்டு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று கடந்த வாரம், கூட சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி ராஜா என்ற கைதி ராம்குமார் ஸ்டைலில் மின்சார கம்பியை வாயால் கடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். செல்போன் திருட்டு வழக்கில் கைதான இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
அடுத்தடுத்து புழல் சிறையில் இதுபோன்று தற்கொலை முயற்சிகள் நடைபெற்று வருவதால், புழல் சிறையில் உள்ள கண்காணிப்பு பணியில் அசட்டை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, புழல் சிறையில் கண்காணிப்பை முறைப்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.