செம்மரக் கடத்தல் ஜூஜூபி.. காவிரியை சூறையாடும் மாபியாக்கள்.. காத்திருக்கும் கிராமத்தினர்!
மணல் மாஃபியாக்களின் வருகைக்காக காவிரி கரை கிராம மக்களே காத்திருக்கிறார்கள்.
Recommended Video
பரமத்தி வேலூர்: நம்ம ஊரில் என்னைக்கு அள்ள வருவாங்களோ? என மணல் கொள்ளையர்களுக்காக காத்திருக்கின்றன காவிரி கரை கிராமங்கள். மணல் கடத்துவதற்காக கிராம மக்களுக்கு அள்ளித் தரும் பணம்தான் இப்படி அந்த மக்களை ஏங்க வைத்திருக்கிறது.
மோகனூர் முதல் கொத்தமங்கலம் வரையிலான காவிரி மணல் சில மாஃபியாக்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இரவோடு இரவாக மணலை கிராமம் கிராமமாக அள்ளிக் கொண்டிருக்கிறது இந்த மாஃபியா கும்பல்.
காவிரி மணல் கடத்தலில் இறங்குபவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத தொகையை கூலியாக தருகின்றனர். டூ வீலரில் ஒரு நடைக்கு 3 அல்லது 4 மூட்டைகள்.. இப்படி சில மணிநேரங்களில் ஒருநபர் 30 முதல் 40 மூட்டைகளை கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்.
40 மூட்டை மணலை திருடிக் கொடுத்தால் ரூ2,000 கூலி. குடும்பத்தில் உள்ள 5 பேரும் மணல் கொள்ளைக்குப் போனால் ஒருநாளைக்கு ரூ10,000. இந்த மணல் கடத்தல் தொழிலுக்கு தொடர்ந்து போனால் சில லட்சங்களை கண்ணில் பார்த்துவிடுகிறார்கள்.
இருக்கிற கடனையும் அடைத்துவிட்டு கையில் கொஞ்சம் தொகையையும் வைத்துக் கொள்கின்றனர். விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தைவிட குறுகிய காலத்தில் நிறைய பணம் கிடைத்துவிடுகிறது.
கூலியாகவே இவ்வளவு தொகை கொடுக்கிறார்கள் எனில் மாஃபியாக்களுக்கான வருமானம் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
செம்மரக் கடத்தலைவிட மிஞ்சுகிற தொழிலாகிவிட்டது காவிரி மணல் கொள்ளை. இதனால் என்றைக்கு நம்ம ஊருக்கு மணல் அள்ள வருவாங்க? என அப்பாவிகள் ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.