விடாமல் கொட்டும் அடைமழை... மீண்டும் நெரிசலில் சிக்குவார்களா சென்னைவாசிகள்?
சென்னை: சென்னையில் பல இடங்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழையால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதசாரிகளும் சாலையில் நடந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை போல இன்றும் பிற்பகல் தொடங்கி விடாமல் மழை பெய்வதால் இன்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க நேரிடுமோ என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர் சென்னைவாசிகள்.
கடந்த வாரம் 23ம் தேதி திங்கட்கிழமையை சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய மழை மாலை 6 மணிக்கு விட்டது. அலுவலகம் முடிந்து 6 மணிக்கு தைரியமாக வீட்டுக்கு கிளம்பியவர்கள் சந்தித்த துயரம் கொடுமையானது. நள்ளிரவு தாண்டியும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தவர்கள் அதிகாலையில்தான் வீடுபோய் சேர்ந்தனர்.
சென்னைவாசிகளுக்கு ஆறுதலிக்கும் விதமாக சில நாட்கள் விட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை விட்டு வெயிலடித்த நிலையில் ஞாயிறு இரவு முதல் பல இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இன்று காலையில் வெயிலடித்த நிலையில் பிற்பகல் முதல் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது.
சென்னையில் பாரிமுனை, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பட்டினப்பாக்கம், சாந்தோம், கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கள், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் குளம்போல தேங்கியுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி உள்ளதால் மழை கொட்டுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல விடாமல் அடைமழை போல கொட்டி வருவதால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
கடந்த வாரம் பெய்த மழையைப் போல விடாமல் பெய்து வருவதால் அலுவலகத்திற்கு சென்றவர்கள் அச்சமடைந்துள்ளனர். மழையின் வேகம் தீவிரமாக இருப்பதால் நேரம்காலத்தோடு வீட்டுக்குப் போய் சேரமுடியுமா? அல்லது மீண்டும் ஒரு நள்ளிரவு பயணத்திற்கு தயாராக வேண்டுமா என்று தவிக்கத் தொடங்கியுள்ளனர்.