சகாயத்தை தொடர்ந்து கிரானைட் ஊழலை கிளறிய கலெக்டர் திடீரென மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரியான அன்ஷுல் மிஸ்ரா திடீரென டெல்லி பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 5 ஆண்டு காலம் அவர் மத்திய அரசுப் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வணிகவரித் துறை (செயலாக்கம்) இணை கமிஷனராக இருந்தவர் அன்ஷுல் மிஸ்ரா. இவர் தற்போது மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 5 ஆண்டு காலம் அவர் மத்திய பணியில் இருப்பார் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதித்துறையில் இணைச் செயலாளராக பொறுப்பேற்கிறார் அன்ஷுல் மிஸ்ரா.
கிரானைட் ஊழலை வெளிக்கொணர்ந்து, மதுரையைக் கலக்கிய சகாயம் கலெக்டர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதும் கலெக்டராக நியமிக்கப்பட்டார் அன்ஷுல் மிஸ்ரா. சகாயம் விட்டுப் போன பணிகளை இவர் தீவிரமாகச் செய்தவர். இதனால் இவரும் மாற்றப்பட்டார். அதன் பிறகு முக்கியத்துவம் இல்லாத பொறுப்பில் இருந்து வந்தார் மிஸ்ரா. தற்போது மத்தியப் பணிக்குப் போயுள்ளார்.