டெல்லிக்கு பறந்த சி ஏ ஏ எதிர்ப்பு கையெழுத்துக்கள்... குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது திமுக
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் மூலம் பெற்ற கையெழுத்துக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக.
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து ஒரு வாரமாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில் 2 கோடியே 55 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்துகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. கையெழுத்து பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு சரிபார்க்கப்பட்டது. பின்னர் கையெழுத்து பெறப்பட்ட 4 லட்சம் படிவங்களை கார்கோ மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக கையெழுத்து படிவங்களை முறைப்படுத்தி பார்சல் செய்யும் பணியில் அண்ணா அறிவாலயம் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அந்த கையெழுத்து படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று விமானம் மூலம் அந்த படிவங்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். நாளை இந்த படிவங்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று சேரும் எனத் தெரிகிறது.
எவ்வளவு பெரிய பொய்.. கூசாம சொல்றாரு.. ஜோதிமணி, செந்தில் குமாரை அரெஸ்ட் பண்ணுங்க.. எச்.ராஜா ஆவேசம்!
இதனிடையே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாவட்ட வாரியாக பெற்ற கையெழுத்து விவரங்களையும் திமுக வெளியிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கோவையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சி ஏ ஏ-வுக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்ககூடிய வேலூர் மாவட்டத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சி ஏ ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆரை எதிர்த்து கையெழுத்திட்டுள்ளார்கள்.
ஒரு கோடி கையெழுத்து பெறுவதை மட்டுமே இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு 2 கோடியே 55 லட்சத்து 66 ஆயிரத்து 82 பேர் ஆதரவு தந்துள்ளதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விரைவில் குடியரசுத் தலைவரை சந்திக்க செல்வார்கள் என்றும், இதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.