வாக்கி டாக்கி முறைகேடு.. காவல் அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
சென்னை: காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு- போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறைக்கு கேமரா, சி.சி.டி.வி, டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2017-18வது ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பான புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துறை கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 12 குழுக்களாக ரெய்டு நடத்தி வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்த அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.