பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதி நியமனம் செய்த 62 பேராசிரியர்களிடம் விசாரணை?
துணைவேந்தர் கணபதி பணிநியமனம் செய்த 62 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் நியமனத்திற்காக லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரால் பணிநியமன ஆணை பெற்ற 62 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் வைத்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து போலீஸார் தங்களது விசாரணை வளையத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வந்துள்ளனர். துணைவேந்தருக்கு உதவியாக இருந்த பேராசிரியர் மற்றும் துணைவேந்தரின் மனைவி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரசாயனம் தடவிய நோட்டுகள்
முன்னதாக, உதவிப் பேராசிரியர் பணிக்கு சுரேஷ் என்பவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றபோது சாதாரண உடையில் தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு பணம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் இந்த லஞ்ச வேட்டையின்போது சிக்கினார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை சுரேசிடம் கொடுத்து அனுப்பி இருந்ததால், அவர்களது வேட்டை மிக எளிதாக முடிந்தது.
துணைவேந்தரின் மனைவியிடம் விசாரணை
குற்றவியல் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா ரசாயனம் தடவி கொடுக்கப்பட்ட 50 நோட்டுகளில் 28 நோட்டுகளை கிழித்து கழிவறைக்குள்ளும், 22 நோட்டுகளை தனது உள்ளாடைக்குள்ளும் மறைத்தார். இருப்பினும் போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை சில மணி நேரம் போராடி மீட்டனர். இதையடுத்து துணைவேந்தர் கணபதியிடமும், பேராசிரியர் தர்மராஜிடமும் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர்கள் பணி நியமனம் உள்பட பல்வேறு பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கி கொண்டு துணைவேந்தர் கணபதி வேலை கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆதாரத்தை அளிக்க முயன்ற சுவர்ணலதா
இந்த பணிநியமன ஊழல் வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இந்நிலையில், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் முதல் குற்றவாளியாக துணைவேந்தர் கணபதி, இரண்டாவது குற்றவாளியாக பேராசிரியர் தர்மராஜ், மூன்றாவது குற்றவாளியாக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன், 4வது குற்றவாளியாக துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா சேர்க்கப்பட்டுள்ளனர். சொர்ணலதா மீது ஆதாரத்தை அழிக்க முயன்றதாக 201வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 மணிநேரம் நடந்த விசாரணை
கணபதி, தர்மராஜ் இருவரிடமும் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் கடந்த ஓராண்டாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சேகரித்து வைத்திருந்த தகவல்களை காண்பித்து விசாரணை நடத்தினார்கள். 2016ம் ஆண்டு துணைவேந்தராக பொறுப்பேற்ற கணபதி இதுவரை 84 பேருக்கு பல்வேறு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். இவர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
துணைவேந்தரின் பல்வேறு முறைக்கேடுகள்
முதற்கட்ட விசாரணையில் 84 பேரில் 62 பேரின் பணிநியமனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கணபதி பணிநியமனம் வழங்கி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். மேலும், உதவிப் பேராசிரியர்கள் பணி இட நியமனம் மட்டு மின்றி உதவிப் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு, பேராசிரியர் பணி இடம் மற்றும் சிண்டிக்கேட் உறுப்பினர்கள் நியமனம் ஆகிய வற்றிலும் கணபதி முறைகேடுகள் செய்ததாக கூறப்படுகிறது.
வடவள்ளி போலீஸில் முதல் புகார்
இந்த முறைகேடுகள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த ஆண்டு பயோ டெக்னாலஜி துறையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தன்னை நியமிக்க லட்சுமிபிரபா என்பவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுபற்றி லட்சுமிபிரபா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பிறகே துணைவேந்தர் கணபதியின் முறைகேடுகள் வெளியில் பேசப்பட்டது. எனவே கணபதி 2016ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்த அனைத்தும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.
துறை ரீதியான நடவடிக்கை
இதற்கிடையே கணபதியிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் பற்றிய பட்டியலும் தனியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களது தகுதி பற்றி தனி விசாரணை நடத்தப்படும். முதல் கட்டமாக 62 பேரின் பணி நியமனம் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் தகுதி இல்லாமல் லஞ்சம் கொடுத்து சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்து உள்ளனர்.