ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துங்க.. 50க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி நூதனப் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் இன்று 21வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக பெண்கள் மற்றும் இளைஞர்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கினார்கள்.
மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடர் போராட்டம் நாடி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
நூதனப் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இந்தப் போராட்டத்தில் தூக்குப்போடுதல், முட்டிப்போட்டுப் பிரார்த்தனை, அங்கப் பிரதட்சணம் செய்தல் என பலவிதமான போராட்டங்களை நெடுவாசல் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
மரத்தில் ஏறி..
போராட்டத்தின் 20வது நாளான நேற்று பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் மரத்தில் ஏறி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளத்தில் இறங்கி..
அந்த வகையில் 21ம் நாளான இன்று குளத்தில் இறங்கி நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டக்காரர்கள் குளத்தில் இறங்கிய போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினார்கள்.
ஆதரவு
நெடுவாசலில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் என அனைத்து தரப்பில் இருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன் தினம் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.